தொடரும் அலட்சியம்...: வேலைவாய்ப்பு அலுவலகக் கதவுடன் போடப்பட்ட கான்கிரீட்

கடலூரில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இரும்புக் கதவுடன் சேர்ந்த்து கான்கிரீட் போடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக நுழைவு இரும்புக் கதவுடன் சேர்த்து போடப்பட்ட கான்கிரீட்.
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக நுழைவு இரும்புக் கதவுடன் சேர்த்து போடப்பட்ட கான்கிரீட்.
Published on
Updated on
1 min read

கடலூர்: வேலூர் மாவட்டத்தில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துடன் சேர்த்து சாலை அமைத்தது, தொடர்ந்து, குடிநீர் அடிபம்பினை இயக்க முடியாத அளவிற்கு கான்கிரீட் அமைத்தது என்று சர்ச்சை எழுந்தது. இதேபோன்று கடலூரில் இரு சம்பவங்கள் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாநகரில் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 45 கி.மீட்டர் தூரத்திற்கு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி மந்தநிலையில் நடந்து வருகிறது. அதுவும் சரியான திட்டமிடல் இன்மையால் சாலையைவிட சுமார் 2 அடி உயரத்திற்கும், சாலையின் குறுக்கே கட்டப்படும் சிறுபாலங்களும், சாலை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரமாக கட்டப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில், வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற எவ்வித வசதிகளும் செய்யாமல் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வடிகாலின் உயரம் சாலை மட்டத்தைவிட அதிகமாக இருப்பதால் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. எனவே, வாய்க்காலையும், அலுவலகத்தையும் இணைக்கும் வகையில் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டது. அந்த கலவை, அலுவலகத்தின் முகப்பில் உள்ள இரும்புக் கதவை திறந்து வைத்த நிலையில்  போடப்பட்டுள்ளது. இதனால், அந்த கதவை எந்த வகையிலும் அசைக்கவோ, மூடவோ முடியாதபடி இரும்புக் கதவு கான்கிரீட்டால் இறுகியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் புகார் அளித்தும் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லையாம்.

இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன்பு உள்ள நுழைவு வாயில் இரும்புக் கதவையும் திறக்க முடியாதபடி கதவுடன் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனால் அலட்சியமாக செயல்படும் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com