மதுரை மாணவர் லோகேஷ்வருக்கு நீதி கிடைத்துள்ளது. தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உயர் கல்வி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எனது நன்றி. மாணவருக்கு வாழ்த்துகள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்விற்கு மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக் கழகம். திருவாரூரில். அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதிச் சீட்டு இரண்டு நாள்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர்.
பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி. தேர்வு மையம் லட்சத் தீவில். எப்படி மாணவர் போவார். கப்பலில் அல்லது விமானத்தில். இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு. விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறும். இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வேறு.
மாணவரின் தந்தை பதறிப்போய் வந்தார். இவரைப் போல எத்தனை மாணவர்களோ, பெற்றோர்களோ. ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல். பணத்திற்கும் அலைச்சல் ஏற்படும்.
உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுபோன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் தேர்ச்சி பெறுவதை விடத் தேர்வு மையத்துக்குச் சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.