வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பைவிட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்,
கேரளத்தின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால் அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகர்கிறது.
இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. வானிலை நிலவரத்தின்படி இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது முதல் தற்போது வரை 856 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்திற்கான இயல்பான அளவு 736 மி.மீ ஆகும். ஆனால் இயல்பைவிட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
மாண்டஸ் புயல் வீசுவதற்கு முன்பாக, இயல்பான மழையின் அளவை விட 3 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இயல்பைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.