அவிநாசி: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி, திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் திருப்பூர் ஜெய்வபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவர்கள் இ.குருபிரசாத், சு.கவின், ரி.பயாஸ் அகமது ஆகியோர் குத்துச்சண்டை போட்டியில் 17வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றனர்.
மாணவன் சு.பிரதீப் ஜூடோ போட்டியில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றார். இவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று, தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் குத்துச்சண்டை, ஜூடோ ஆகிய போட்டிகளில் 17 பேர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இதேபோல சமூக அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 14 கிலோ மீட்டர் மராத்தான் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவன் தனுஷ் 5ஆம் இடமும், 10ஆம் வகுப்பு மாணவன் கமலேஸ் 6ஆம் இடமும் வென்றனர்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு தலைமையாசிரியர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.