
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகளை வழங்குவதற்கென 'நம்ம பள்ளி திட்டம்' என்னும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை(டிச.19) தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள்(என்ஜிஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி(சிஎஸ்ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் நோக்கத்தில் 'நம்ம பள்ளி திட்டம்' தொடங்கப்படுவதோடு, இதற்கான இணையதளத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம்.
மேலும், பணிகளுக்கு முறையாக நிதி பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதியுதவி செய்தவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் வலுப்படுத்த இயலும் என்ற வகையில், இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.