டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023 ஆம் ஆண்டுக்குள் நடத்திட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு குரூப் 2-க்கு நடைபெற்று முடிந்த முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதேபோன்று, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும் அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு 2024 பிப்ரவரியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023 ஆம் ஆண்டுக்குள் நடத்திட வேண்டும் என்றும் எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நிரப்பப்படாத பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டித் தேர்வினை எழுதத் தயாரான சூழல் சமீபத்தில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் இது வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு