92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்: ஆட்சியர் நேரில் விசாரணை

புதுக்கோட்டை அருகே தலித் குடியிருப்பிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.

News image
Updated On :27 டிசம்பர் 2022, 7:07 am

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தலித் குடியிருப்பிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்தது வேங்கைவயல் கிராமத்தில் சுமார் 30 தலித் குடும்பங்களின் குடியிருப்புகள் உள்ளது.

இங்கு வசிக்கும் சிறார்களுக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறார்களை பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரில் கலப்பு இருந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சந்தேகமடைந்த மக்கள், தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி திங்கள்கிழமை பார்த்துள்ளனர். அதில், மனிதக் கழிவு மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) எம். சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் எம். பத்மா ஆகியோர் பார்வையிட்டு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் வருகை தந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மனிதக் கழிவு கலந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, கோயில்கள் உள்ளே பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மறுப்பதாக ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையிட்டனர். கிராம மக்களின் கோரிக்கைகளை பெற்ற மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.