சென்னை: நான் முதல்வராவதற்கு முன்பே பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். சொல்லாததையும் செய்வதுதான் திமுக அரசு என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், முந்தைய ஆட்சியில் சீரழித்துச் சென்ற நிதிநிலையை சீரமைத்து வருகிறோம். சொல்லாததையும் செய்வதுதான் திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றிவருவதை, முன்னாள் முதல்வர் பழனிசாமியால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
நகர்ப்புற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையவிடாமல் தடுப்பார்கள். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வெற்றிபெற்றால்தான், அனைத்து திட்டங்களும் மக்களைச் சென்றடையும்.
மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு பொய்யை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் ஸ்டாலின் கூறினார்.