மாநில, மாவட்ட அளவில் ஊடகங்களில் பிரசார விளம்பரம் செய்வோா் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் மாநில அளவில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு, தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம், உத்தேசிக்கப்பட்டுள்ள விளம்பரத்தின் மாதிரி இரண்டு நகல்களோடு உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னா் மட்டுமே நாளிதழ்களில், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய வேண்டும்.
மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரத்துக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் செயல்படும் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பர எண் மற்றும் நாள் ஆகியவற்றை விளம்பரப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.