அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் ரகத்துக்கு 15 சதவீதம், சோமனூர் ரகத்துக்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும், 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படுமென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க.. காதல் மனங்களை இணைக்கும் பாரீஸ் 'லவ் லாக்' பாலம்
ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிவையில், தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள், பாவு நூல் பிணைப்போர் உள்ளிட்டோர் விறகு அடுப்பு வைத்து கஞ்சித் தொட்டி திறந்துள்ளனர். இதனால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், கஞ்சித் தொட்டி வைப்பதை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.