பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை (ஜன.14) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை (ஜன.14) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்கள் உறுதுமொழி ஏற்றதை அடுத்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உள்ளிட்ட முக்கிய நபர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்!
முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கு முயற்சியில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகளுக்கும், 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில், சிறந்த காளைக்கு காா் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக பரிசாக வழங்கப்பட உள்ளது.
கலந்து கொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயமும், மாடுபிடி வீரா்களுக்கு ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசின் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டிருக்கும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.