கிருஷ்ணகிரி: பொங்கல் தொகுப்பு வாங்கியதில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.270 ஊழல் நடந்துள்ளதாக தமிழக அரசின் மீது கே.பி. முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கே.பி. முனுசாமி பேசியதாவது:
தமிழகத்தில் 2.15 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.1,159 நிதி செலவழித்ததாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் தொகுப்புகளை சில்லறை விலையில் வாங்க ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 300 லிருந்து ரூ 350 வரை ஆகும். மொத்தமாக கொள்முதல் செய்ததில் ரூ 570 செலவாகி உள்ளது. அதாவது ஒரு குடும்ப அட்டைதாருக்கு பொங்கல் தொகுப்பு வாங்க ரூ.270 ஊழல் நடைபெற்றுள்ளது.
பொங்கல் தொகுப்பு விநியோகம் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் தவறு செய்த அமைச்சர்கள் மீதும் அரசு அலுவலர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு தமிழருக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. திறமையற்ற அரசாகவே உள்ளது. இதை மறைக்கவே முன்னாள் அமைச்சர்கள் மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி உள்ளது இந்த அரசு எனத் தெரிவித்தார்.