தஞ்சாவூர்: தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எம்.ஜி.ஆர். சிலையைப் பெயர்த்து அகற்றிய மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் வடக்கு வீதி - சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் 4 அடி உயர பீடத்தில் 2 அடி உயரத்தில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே ஒரு தேநீர் கடையும் உள்ளது. இக்கடையை செவ்வாய்க்கிழமை அதிகாலை திறக்க வந்த உரிமையாளர், எம்ஜிஆர் சிலை காணாமல் போயிருப்பதைப் பார்த்தார்.
தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அதிமுக பகுதி செயலாளர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது, அருகில் இருந்த தள்ளுவண்டி அருகே சிலை கிடந்தது. இதை அதிமுகவினர் மீட்டு, மீண்டும் சிலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, சிலை எதற்காக அகற்றப்பட்டது என்பது குறித்தும், மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.