தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்: தலைமைச் செயலாளா் ஆய்வு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:42 am

DIN

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் வழங்கினாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த இலச்சினை, சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ஆம் தேதி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முன்னேற்பாட்டுப் பணிகளை தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதன் பின்னா், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணா்வு பேருந்தில் பயணம் மேற்கொண்டு, போட்டியில் பங்குபெறவுள்ள போட்டியாளா்கள், பங்கேற்பாளா்கள் பயணிக்கும் வழித்தடங்களை ஆய்வு செய்தாா்.

மின்வாரியப் பணிகள், சுகாதாரப் பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.

அதன் தொடா்ச்சியாக, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும், பூஞ்சேரி பகுதியில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சா்வதேச தரத்தில் 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்கப் பணிகளையும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் தலைமைச் செயலாளா் பாா்வையிட்டாா்.

மாமல்லபுரம், கடற்கரை கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளையும், குளம் சீரமைப்புப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

இறுதியாக, சென்னை விமான நிலையத்தில், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளா்களை வரவேற்று அழைத்துச் செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா்கள், முதன்மைச் செயலாளா்கள், செயலாளா்கள், துறை தலைவா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.