சென்னை: மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: வடிவேலுவுக்கு மதிப்பளித்து முடிவை மாற்றிய யோகி பாபு படக்குழு
மத்திய அரசின் உத்தரவு குறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது. நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள விதிகளே தொடரும் என்று தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீரை கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்டவற்றை அமைத்து எடுக்க ரூ.10,000 கட்டணம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவின்படி தடையில்லா சான்றிதழ்(என்ஓசி) கோருபவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.10,000 செலுத்தி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.
மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றில் நீர் மேலாண்மைக்கான தொழில்நுட்ப ஆதாரங்கள் இல்லை. எனவே நிலத்தடி நீரை பராமரிப்பது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்று நீர்வளத் துறையின் மூத்த அதிகாரி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
நிலத்தடி நீரை சுரண்டுவதைத் தடுக்க தமிழ்நாடு நிலத்தடி நீர் (வளர்ச்சி மற்றும் மேலாண்மை) சட்டம், 2003 இயற்றப்பட்ட போதிலும், 2014 வரை தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மையில் மத்திய அரசு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, சட்டம் புதுப்பிக்கப்பட்டு, மாநிலம் தனியாக செயல்பட்டு வருகிறது என்று அதிகாரி மேலும் கூறினார்.
ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு நீர்வளத்துறையின் தடையில்லா சான்றிதழ் இந்த சட்டம் கட்டாயமாக்கியது என்று அதிகாரி கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, நிலத்தடி நீரைப் பாதுகாக்க இன்னும் சில விதிகளை நீர்வளத் துறை முன்மொழிந்துள்ளது. இந்த விதிகள் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு பரிந்துரைகளைப் பெற ஒரு வாரத்திற்குள் பொது தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரி கூறினார்.