வடிவேலுவுக்கு மதிப்பளித்து யோகி பாபுவின் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகர் பிரபலமாக இருப்பார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக யோகி பாபு தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
தனி நாயகன், நகைச்சுவை பாத்திரம் என அடுத்தடுத்து முத்திரை பதித்துவருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் யோகி பாபு நடிக்கிறார்.
இந்த நிலையில் காண்டிராக்டர் நேசமணி என்ற படத்தில் யோகி பாபுவும், ஓவியாவும் இணைந்து நடித்துவந்தனர். இந்தப் படத்தை சுவதீஸ் என்பவர் இயக்கி வருகிறார்.
காண்டிராக்டர் நேசமணி என்பது ஃபிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த கதாப்பாத்திரம். கடந்த 2019 ஆம் ஆண்டு ட்விட்டர் பதிவர் விளையாட்டாக காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என ஹேஷ்டேக் பதிவிட அது உலக அளவில் டிரெண்டானது.
இந்திய அளவில் பலரும் யார் அந்த நேசமணி? அவருக்கு என்ன ஆனது ? என கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு புகழ் பெற்ற பெயர் காண்டிராக்டர் நேசமணி.
இந்த நிலையில் வடிவேலுவுக்கு மதிப்பளித்து யோகி பாபு படக்குழுவினர் தங்கள் படத்தின் பெயரை காண்டிராக்டர் நேசமணி என்பதற்கு பதிலாக பூமர் அங்கிள் என மாற்றியுள்ளனராம்.