
கம்பம்: தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில் விநாடிக்கு, 744 கன அடி கூடுதலாக வந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது, தொடர் மழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி அணை பகுதியில், 20.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 14.2 மி.மீ., மழையும் பெய்தது.
அணையின் நீர்மட்டம்,128.10 அடியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீர் இருப்பு 4,288 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு, 2,648 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1,655 கன அடியாகவும் இருந்தது.
புதன்கிழமை அணைக்குள் விநாடிக்கு, 1,904 கன அடியாக வந்தது, வியாழக்கிழமை விநாடிக்கு, 2,648 கன அடியாக வந்தது. ஒரே நாளில் விநாடிக்கு, 744 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது குறிப்பிடத்தக்கது.
மின் உற்பத்தி
அணையிலிருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர், 1,655 கன அடி வருவதால், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் இரண்டு மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட்டும், மற்ற இரண்டு மின்னாக்கிகளில் தலா, 32 மெகாவாட் என மொத்தம், 148 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.