உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவி இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறித்து, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
இதையும் படிக்க | பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து
கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்கள், நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 12 பதிவிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள மொத்த 510 பதவியிடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை(ஜூலை 9) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்ற வருகிறது.
சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். குறிப்பாக தள்ளாடும் வயதிலும் தடி ஊன்றி முதியோர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.
வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளை சிசிடிவி கேமராக்கள் மூலமாக நேரடியாக தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.