தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருவள்ளூர், கோவை, மதுரை, திருவாரூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை களைகட்டியது.
இஸ்லாமிய இறைத்தூதர்களில் முக்கியமானவர்களின் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே மசூதிகளில் குவிந்தனர். தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
மேலும், ஏழைகளின் பசியைப் போக்கும் வகையில் குர்பானி (ஆட்டிறைச்சி) வழங்கினர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.