அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் விரைவில் நீக்கப்படுவார் என இபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் பேசியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று அதிமுகவில் எதிர்பாராத பல்வேறு திருப்பங்கள், குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் உள்ளார்.
இந்நிலையில் பொதுக்குழு மேடையில் பேசிய கே.பி. முனுசாமி, கட்சியில் இருந்து ஓபிஎஸ் விரைவில் நீக்கப்படுவார் என்று கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்த தீர்மானம் நிறைவேற்றுவது குறித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து மேடையிலேயே கே.பி.முனுசாமிக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ்-ஐ உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கே.பி. முனுசாமி கூறியுள்ளார். இதனால் மேடையில் சற்று பரபரப்பு நிலவியது. கே.பி. முனுசாமி, ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இதனால் விரைவில் அதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்படும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!