தமிழகத்தில் தற்போது மின் கட்டண உயர்வு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசும் முந்தைய அதிமுக அரசும்தான் காரணம் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. அந்த நிலை மாறாத வகையில்தான் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடி கடன் உள்ளது. மின் மிகை மாநிலமாக இருக்கும் தமிழகம் என்று அதிமுக ஆட்சியின்போது கூறினார்கள். தமிழகம் ஒரு மின் மிகை மாநிலம் என்றால், 4.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஏன் வழங்கவில்லை. இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்த 4.50 லட்சம் விவசாயிகள் ஏன் காத்துக்கிடந்தார்கள் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தனியாரிடம் மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்று சொல்வது சரியா? தற்போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட மத்திய அரசும் முந்தைய அதிமுக அரசும்தான் காரணம். மின்சாரம் குறைந்த விலைக்குக் கிடைக்கும் போது, அதனைவிடுத்து, அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது ஏன் என தங்கமணி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வுக்கு பாஜக போராட்டம் நடத்துவது குறித்து கேட்டதற்கு, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்குத்தான் தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டும். கடந்த 2013ஆம் ஆண்டு கூட அதிமுக ஆட்சியில் 33 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.