இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 18இல் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்வில் இளையராஜா பதவியேற்கவில்லை.
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால், இளையராஜாவால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இளையராஜா இன்று பிற்பகலில் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு தமிழில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.