முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை இபிஎஸ் உறவினர்களுக்கு வழங்கியதில் ரூ. 4,000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, 2018இல் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தமைமை நீதிபதி முன்பு தமிழக அரசு தரப்பில் இன்று முறையிடப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, முறைகேடு வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியிலிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.