ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
நமது முன்னோர்கள் நினைவாக மாதம் தோறும் அமாவாசை நாளன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் நம்பிக்கையாக தொன்றுத்தொட்டு விளங்கி வருகிறது. மாதம் தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் ஆடி, தை மற்றும் மகாலய பட்ச அமாவாசை நாளன்று மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகுந்த பலன்களை கொடுக்கும் என புராணங்கள் கூறுகின்றனர்.
பூம்புகார் சங்கமத்தில் நீராடும் மக்கள்.
இத்தகைய பித்ரு தர்ப்பணங்களை காவேரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில் செய்தால் பல மடங்கு பலன்களை கிடைக்கும் என்பது காவிரி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினார்கள். முதலில் சங்கல்பம் செய்துவிட்டு காவேரி ஆற்றிலும், பின்னர் கடலிலும் அதனைத் தொடர்ந்து மீண்டும் காவிரி ஆற்றிலும் நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்தனர்.
நிகழாண்டு காவிரியில் அதிக அளவில் நீர் வந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீராடினார்கள். பெண்கள் கருகமணி, எலுமிச்சை வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பொருள்களை காவேரி அம்மனுக்கு படையல் செய்து வழிபட்டனர்.
அம்மனுக்கு படையல் செய்து வழிபட்ட மக்கள்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மேற்பார்வையில் பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்.