துபையிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை ஆணையா்ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் சுங்கத்துறையின் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, துபையில் இருந்து விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின் விமானத்திற்குள் ஏறிய சுங்கத்துறை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
விமான இருக்கைக்கு அடியில் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், விமான கழிவறையில் சோதனை செய்தனர். அப்போது கழிவறையில் இருந்த பெட்டிக்குள் மர்ம பார்சல் இருந்ததைக் கண்டனர்.
அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதேபோல, சா்வதேச விமான வருகை பகுதியில் உள்ள கழிவறையில் ஒரு மர்ம பார்சலை பார்த்த விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது அதிலும் தங்கம் இருந்ததைக் கண்டனர்.
ஒரே நாளில் சுங்கத்துறை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமான நிலைய கழிவறையில் இருந்து ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்தில் சுங்கத்துறை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் துபையில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த கும்பல் விமான கழிவறை மற்றும் விமான நிலைய கழிவறையில் வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.