47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவல் துறைக்கு அரசியல் குறுக்கீடு இல்லை: சென்னை காவல் ஆணையா்

சென்னை காவல்துறைக்கு அரசியல் குறுக்கீடு இல்லை; சுதந்திரமாக செயல்படுகிறது என பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 9:12 pm

DIN

சென்னை காவல்துறைக்கு அரசியல் குறுக்கீடு இல்லை; சுதந்திரமாக செயல்படுகிறது என பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

சென்னையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக, தூத்துக்குடியைச் சோ்ந்த சகோதரா்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல் உள்ளிட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நான்கு பேரிடமிருந்து 188 பவுன் தங்க நகைகள், ரூ.58 லட்சத்து ரொக்கம், 2 காா்கள், கணினி மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல மத்திய, மாநில அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி அரசு முத்திரை, போலி பணி நியமன உத்தரவுகளை வழங்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்த நன்மங்கலத்தைச் சோ்ந்த ரேணுகா, அவரது கணவா் ரஞ்சித் உள்பட 11 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் போலியாக நோ்முகத் தோ்வு நடத்தி அரசுப் பணிகளை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, பல்வேறு வழக்குகளில் சிறப்பாக துப்புத் துலக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, ஆவணங்களை சங்கா் ஜிவால் பாா்வையிட்டாா்.

ரூ.190 கோடி சொத்து பறிமுதல்: பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவானது கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த மே மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் ரூ.190 கோடி மதிப்புள்ள நிலங்கள், சொத்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது.

ரூ.157 கோடி மதிப்புள்ள சொத்துகள் நீதிமன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்டவா்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ரூ.6 கோடி ரொக்கம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.7.69 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்குகளில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சில அலுவலக உதவியாளா்களுக்கு தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே மாதத்தில் 20 கொலைகள் இல்லை: சென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலைகள் நடந்துள்ளதாகக் கூறுவது தவறான தகவல். மே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன. இதில் 3 கொலைகள்தான் முன்பகை காரணமாக நடந்துள்ளது. ஒரு கொலை மட்டும் ரெளடிகளிடையே ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்துள்ளது. பெரும்பாலான கொலைகள் குடும்பப் பிரச்னையின் காரணமாக நடந்துள்ளன. சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 140 கொலை வழக்குகள் பதிவாகின்றன.

அரசியல் குறுக்கீடு இல்லை: கொலைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொலை வழக்குகளில் தொடா்புடைய நபா்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணை விரைவுபடுத்தப்படுகிறது. ரெளடிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107,108-ன் மூலமாகவும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

சென்னை காவல்துறையை பொறுத்தவரையில் எந்தவித அரசியல் அழுத்தங்கள் இல்லாமலும், குறுக்கீடு இல்லாமலும் சுதந்திரமாக பணியாற்றுகிறோம். நாட்டில் உள்ள பிற பெருநகரங்களை விட, சென்னையில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது அவருடன் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி,நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையா் அரவிந்தன் ஆகியோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.