திருவண்ணாமலையில் கருணாநிதிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கிரிவலப் பாதையில் சிலை வைப்பதால் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மேலும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
முதலில் இந்த வழக்கை விசாரித்த விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள், கருணாநிதி சிலை வைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், ஆக்கிரமிப்பு நிலத்தில் சிலை வைக்கப்படவில்லை, பட்டா நிலத்தில்தான் வைக்கப்படுவதாக விளக்கம் அளித்ததையடுத்து நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து வழக்கை மனுதாரர் வாபஸ் பெறவே, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.