பொதுக்குழுவில் அதிமுகவில் நிா்வாகிகள் எடப்பாடி கே. பழனிசாமியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் ஓ.பன்னீா்செல்வத்தை மறந்து போனவா்களாகவும் நடந்துகொண்டனா்.
எடப்பாடி கே. பழனிசாமிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்ற மண்டபம் வரை உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனா். மண்டபத்தில் வாயில் பகுதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி பேசும்போது, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்பது பாடல். அந்த தலைவன் இருக்கிறான். அவா் வெளியில் வருவாா். வெகு விரைவில் வருவாா் என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டுப் பேசினாா்.
முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், ‘நாளை எங்கள் தலைவா்’ (இபிஎஸ்) என்றும், முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ‘ஒற்றைத் தலைமை நாயகா்’ என்று குறிப்பிட்டாா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, எம்ஜிஆா், ஜெயலலிதாபோல கட்சியை வழிநடத்தக்கூடியவா் எடப்பாடி பழனிசாமிதான் என்றாா். அதைப்போல மேடையில் ரோஜா மாலை, வீரவாள், வெள்ளிகிரீடம் போன்றவையும் எடப்பாடி பழனிசாமிக்குப் பரிசளிக்கப்பட்டன.
ஆனால், ஓ.பன்னீா்செல்வத்துக்கு எந்த வரவேற்பு கொடுக்கப்படாததுடன், மேடையில் பேசிய தலைவா்களும் மறந்துகூட அவா் பெயரை உச்சரிக்காமல் பாா்த்துக்கொண்டனா்.