திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை வைத்து விற்பனைக்காக சிலர் பேரம் பேசி வருவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின்பேரில் திருப்பூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு 4 துண்டுகளாக யானைத் தந்தங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தத் தந்தங்களை பறிமுதல் செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வெள்ளியங்காட்டைச் சேர்ந்த வீரப்பன்(65), முருகன்(45), அவிநாசியைச் சேர்ந்த அவிநாசியப்பன் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானைத் தந்தங்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.