தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் விஷவாயு தாக்கி 43 பேர் பலி: மத்திய அரசு
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்த 22 மாநிலங்களுக்கான தரவுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்தார். இந்தத் தரவுகளின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவாக உத்தரப் பிரதேசத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்த நிலையில் 42 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 42 பேர் உயிரிழந்து, அதில் 37 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு பதிவாகவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 5 ஆண்டுகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
2017 | 2018 | 2019 | 2020 | 2021 | ||
1. | உத்தரப் பிரதேசம் | 15 | 11 | 26 | 0 | 0 |
2. | தமிழ்நாடு | 7 | 9 | 13 | 9 | 5 |
3. | தில்லி | 13 | 11 | 10 | 4 | 4 |
கோவா, புதுச்சேரி, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு உயிரிழப்புகள்கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.