ஏர் இந்தியா கைவிட்டுப் போனதன் விளைவு என்று, உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை அழைத்து வர ஐந்து மடங்கு கட்டணத்தை உயர்த்திய தனியார் விமான நிறுவனங்கள் குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை அழைத்து வர விமானக் கட்டணத்தை ஐந்து மடங்கு தனியார் நிறுவனங்கள் உயர்த்தியது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். இதற்கு பதிலளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, அரசு எவ்வாறு ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவெகியா ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகள் வாயிலாக மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வரச் செய்தது என்பது குறித்தும், அரசே அவர்களுக்கு உரிய விமானக் கட்டணங்களை செலுத்திவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விமானக் கழக சட்டம் மார்ச் 1994 இல் ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டணங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டது என்றும், அவர்கள் அது தொடர்பான எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு நியாயமான கட்டணத்தை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அவர்களது செயல்பாட்டிலோ, வணிக முடிவுகளிலோ அரசு தலையிடுவதில்லை எனத் தெரிவித்தார்.
இது குறித்த கேள்வி பதிலை இணைத்து, சு. வெங்கடேசன் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது,
உக்ரைன்: உச்சத்திற்கு கட்டணம் உயர்த்திய தனியார் விமானங்கள்.
கடிவாளம் இல்லை என அமைச்சர் கைவிரிப்பு
ஏர் இந்தியா கைவிட்டு போனதன் விளைவு.
பொதுத் துறைகளை தனியார் மயம் ஆக்கும் மத்திய அரசு இப்பவாவது யோசிக்க வேண்டாமா?
எரிகிற வீட்டில் பறிப்பதற்குப் பெயர் வணிகம் அல்ல கொள்ளை என்று பதிவிட்டுள்ளார்.