மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அதிமுக ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகளில், மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற வாக்கிற்கேற்ப அதையும் நிறைவேற்றுவோம் என்று பே
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகளில், மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற வாக்கிற்கேற்ப அதையும் நிறைவேற்றுவோம் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அவை விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக நிறைவேற்றாத திட்டங்களை பட்டியலிட்டதோடு, திமுக நிறைவேற்றிய திட்டங்களை புள்ளிவிவரங்களோடு வெளியிட்டார்.

உரையை நிறைவு செய்யும்விதமாக பேசிய அவர்,  எதிர்க்கட்சிகள் கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில் மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற அண்ணாவின் வாக்கிற்கேற்ப,  மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பேரவையில் பேசிய ஸ்டாலின், நான் தொடர்ந்து ஒன்றை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். இந்த அவையிலும் பல முறை நான் பதிவு செய்திருக்கிறேன். இது எனது அரசு அல்ல. நமது அரசு. அந்தக் கருத்தினைப் பின்பற்றி இந்த அவையில் நமது அரசின் நிலைப்பாட்டை விளக்கிட விரும்புகிறேன்.

தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் வேளையில் “பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன” என்று கேட்பது போல் இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, “இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல பட்டப் படிப்பிலும் பதக்கம் வெல்லும்”.

நீங்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து நீங்கள் வைக்கக்கூடிய நினைவூட்டல் என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

மேலும், ஒன்றை இந்த அவையில் மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்து காட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இறுதியாக ஒரு கருத்தை இந்த அவையில் பதிவிட விரும்புகிறேன், எதிர்க்கட்சிகள் கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில் மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற அண்ணாவின் வாக்கிற்கேற்ப,  மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com