
தஞ்சாவூர்: மத்திய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை காலை தொடங்கிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, தஞ்சாவூரில் 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் காலையில் பெரும்பாலான பேருந்துகள் வராததால் அரசு, தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் கிடைக்காததால் அவதிப்பட்ட பயணிகள்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று, இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் மூலம் பயணிகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். பயணிகள் அதிகமாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் சில பேருந்துகள், சிற்றுந்துகளை வழித்தடம் மாற்றி இயக்க நடவடிக்கை எடுத்தார். என்றாலும் பெரும்பாலானவர்கள் பேருந்து வசதி கிடைக்காததால் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனிடையே, பல்வேறு தொழிற் சங்கத்தினர் ஆற்றுப் பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திஜி சாலை, ரயிலடி வழியாகச் சென்று தலைமை அஞ்சலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.