சாத்தூர்: சாத்தூர் அருகே சாலையோர மரத்தில் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 20 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சடையம்பட்டியில் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு கல்லூரி சார்பாக வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் கணபதி (60) என்பவர் திருவேங்கடம் பகுதியிலிருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்து சாத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த போது, மேட்டுப்பட்டி அருகே திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள மரத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்த மாணவிகளை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், 5 மாணவிகள் மட்டும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலூகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்கை | தஞ்சாவூர்: ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம்