சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவினையடுத்து அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஆஞ்சநேயர் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதனையடுத்து அருள்மிகு சென்னகேவப்பெருமாள் சுவாமி சங்ககிரி திருமலையிலிருந்து நகருக்கு வெள்ளிக்கிழமை மாலை எழுந்தருள, ஊர் பட்டக்காரர் எஸ்.ஏ.ராஜவேல், ஊர்க்கவுண்டர் எஸ்.டி.சுந்தரேசன், திருவிழா ஆலோசனைக்குழுத்தலைவர் கே.எம்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஆஞ்சநேயர் உற்சவமூர்த்தி சுவாமிகளை பக்தர்கள் திருமலைக்கு பல்லக்கில் எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து இன்றைய தினம் இரவு சுவாமி அன்னபட்சி வாகனத்திலும், மே 7-ம் தேதி சனிக்கிழமை சிங்க வாகனத்திலும், மே 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுமந்த வாகனத்திலும், மே 9-ம் தேதி திங்கள்கிழமை கருட வாகனத்திலும், மே 1 -ம் தேதி செவ்வாய்க்கிழமை சேஷ வாகனத்திலும், மே 11-ம் தேதி புதன்கிழமை புன்னை மர சேவையும், இரவு யானை வாகனத்திலும், மே12 ம் தேதி வியாழக்கிழமை சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபமும், மே13-ம் தேதி வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்திலும் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருதலும், மே 14-ம் தேதி சனிக்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
அதனையடுத்து பல்வேறு கட்டளை வழிபாட்டிற்கு பின்னர் சுவாமி மே 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு எழுந்தருளுகிறார். தேர்த் திருவிழாவினையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் தினசரி காலை, மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.