அடுத்த 24 மணிநேர்த்தில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை அசானி புயலாக வலுப்பெற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திரையில் நகர்ந்து 10ஆம் தேதி அன்று மாலை வட ஆந்திரம்-ஒடிசா கடற்கரை யொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புர, கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கக்கூடும்.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.