ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்( 31), ராஜபாளையம் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன்(35) இருவரும் எலக்ட்ரிஷன் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டயதேவன்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க பைக்கில் சென்றுள்ளனர்.
அப்போது லட்சுமியாபுரம் விலக்கு பகுதியில் சாலை ஓரமாக பைக்கை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கேரளத்திலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஒன்று சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த ஆறு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த இருவரது உடலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கார் மோதிய வேகத்தில் காரும் பைக்கும் தூக்கி வீசப்பட்டு சாலையின் அருகே உள்ள பாலத்துக்கு அடியில் விழுந்து இருந்தது குறிப்பிடதக்கது.