நெல்லை மாவட்ட திருப்பணி கரிசல் குளம் அருகே ஊர் முகப்பில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் சிலை மற்றும் பூலித்தேவன், முத்துராமலிங்க தேவர் திருவுருவப்படத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் மக்கள் அப்பகதியில் திரண்டதால் பதற்றம் உருவானது.
நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் பகுதியில் ஊர் மக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பூலித்தேவன் திரு உருவப்படங்கள் வைக்கப்பட்டது. அந்த பீடத்தில் முத்துராமலிங்க தேவரின் ஒரு அடி உயரம் உள்ள களிமண்ணலான சிலை ஒன்றும் வைக்கப்பட்டது. நேற்றைய தினம் இரவில் மர்ம நபர்களால் அந்த சிலை உடைக்கப்பட்டதுடன் படங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளதை காலையில அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு பகுதி காவல்துறை துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சிலை மற்றும் தலைவர்கள் உருவ படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்த படங்கள் மற்றும் சிலைகள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு புதிய படங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பேருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.