ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலையானார்.
சிறை நடைமுறைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டார். ஏற்கெனவே வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தனும், புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரும் விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இருந்து விடுதலையான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை பேரறிவாளன் நேரில் சென்று வரவேற்றார்.
இதையும் படிக்க- நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை
இதனிடையே அனைவரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய நளினி, ரவிச்சந்திரன் மட்டுமின்றி சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்போது, மனுதாரா்கள் 6 பேரின் சிறைவாசத்தின் போது அவா்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததையும், அவா்களின் கல்வித் தகுதி, உடல்நிலை, செயல்பாடுகளையும் உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.