கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை திமுக அமைச்சர்களும், அதிகாரிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முழுமையாக பார்வையிட்டு வேளாண் பெருமக்களுக்கு எந்தவிதமான ஆறுதலையும் சொல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் 15.11.2022 என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே, பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளிடம் நேரில் சென்று, அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர, காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இந்தாண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பீரிமியத்தை செலுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன்.
மேலும், தற்போது பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.