தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், அதன் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி எம். தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது பதவி விலகலை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உறுப்பினர்களாக ச. கருத்தையாபாண்டியன், இ.ஆ.ப., (ஓய்வு); மு. ஜெயராமன், இ.ஆ.ப., (ஓய்வு); இரா. சுடலைக்கண்ணன், இ.ஆ.ப., (ஓய்வு); கே. மேக்ராஜ், இ.ஆ.ப., (ஓய்வு); மருத்துவர் முனைவர் பெரு. மதியழகன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் எஸ்.பி. சரவணன், முதல்வர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி, முத்தூர், திருப்பூர் மாவட்டம் ஆகியோர்களை நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க | நவ. 19 (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு