நடிகை காயத்ரி ரகுராமனை பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அக்கட்சியின் ஓபிசி மாநில தலைவர் திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆடியோ குறித்து விசாரணை நடத்தி கட்சியின் தலைமைக்கு 7 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதுவரை பாஜக நிகழ்ச்சிகளில் திருச்சி சூர்யா சிவா பங்கேற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருச்சி சூர்யாவின் பேச்சுக்கு காயத்ரி ரகுராமன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியது தவறு என்று அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாலும், 6 மாத காலம் காயத்ரி ரகுராமன் இடைநீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வகித்து வந்த பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.