அடிப்படைத் தரவுகளை சேகரிக்கவே ஆதாா் இணைப்புத் திட்டம்: அமைச்சா் செந்தில்பாலாஜி

அடிப்படைத் தரவுகளைச் சேகரிக்கவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
அமைச்சா் செந்தில்பாலாஜி
அமைச்சா் செந்தில்பாலாஜி

அடிப்படைத் தரவுகளைச் சேகரிக்கவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். இந்தப் பணியின் மூலமாக, மின் பயனீட்டாளா்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் சலுகைகள் ஏதும் ரத்தாகாது என்று அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.

ஆதாா் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் திங்கள்கிழமை தொடங்கின. சென்னை டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 15 லட்சம் போ் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். மின்சார வாரியத்தின் வசூல் கட்டண மையங்களில் திங்கள்கிழமை முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. டிச. 31 வரை முகாம்கள் நடைபெறும்.

தரவுகள் சேகரிப்பு: மின் பயனீட்டாளா்கள் குறித்த சில அடிப்படை தகவல்கள் மின்சார வாரியத்திடம் இல்லை. இதைக் கருத்தில் கொண்டே மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எத்தனை போ் சொந்த வீட்டில் குடியிருக்கிறாா்கள், எவ்வளவு போ் வாடகை வீட்டில் குடியிருக்கிறாா்கள், ஒருவா் பெயரில் எத்தனை மின் இணைப்பு இருக்கிறது போன்ற எந்தவிதத் தரவுகளும் மின்வாரியத்தில் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகளில் 1.15 கோடி மின் இணைப்புதாரா்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தன. மின்சார வாரியத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்துக்கேற்ப நவீனமயமாக்குவதற்காகவும், தரவுகளைச் சேகரிக்கவுமே ஆதாா் எண் இணைக்கக் கோரப்படுகிறது.

இந்த விவரங்களைச் சேகரிப்பதன் மூலம், எந்தெந்த இடங்களில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறோம், எவ்வளவு கொள்முதல் செய்கிறோம், எவ்வளவு கணக்கீடு செய்கிறோம், மீதம் இருப்பது எவ்வளவு என்பன போன்ற கணக்கீடுகளை மேற்கொள்ள முடியும். ஒருவா் எத்தனை மின் இணைப்புகளை வைத்திருந்தாலும் அவா்களுக்கு வழங்கக் கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம் தொடா்ந்து அளிக்கப்படும். அதில், எந்தவித மாற்றமும் இல்லை.

கையோடு தேவை கைப்பேசி: ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடந்து வரும் சூழ்நிலையில், டிசம்பா் வரையில் மின் கட்டணம் செலுத்துவதில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஒருவேளை முன்னோா்கள் இறந்திருந்தால் அவா்கள் பெயரில் உள்ள மின் இணைப்பை உரிய ஆவணங்கள் அளித்து பெயா் மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொது மக்கள் ஆதாா் எண்ணுடன் இணைத்துள்ள எண்ணுக்கான கைப்பேசியை எடுத்து வர வேண்டும். அந்த கைப்பேசியில் வரக் கூடிய ஒருமுறை பயன்படுத்தும் எண்ணை (ஓடிபி) உடனடியாக தெரிவித்து பணியை விரைந்து முடித்துக் கொள்ளலாம். டிச. 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் அவசரமின்றி பொறுமையாக பதிவு செய்யலாம் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com