சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிழற்குடையில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் விடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இது குறித்து நாம் பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில், சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட வெங்காய தலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி என்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிறந்து சில மணி நேரத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை!
இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தீயாய் பரவி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் வாழ்க்கை குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும், உடனடியாக இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.