கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மந்தையம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்மிகு மந்தையம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பெரியாற்றின் கரையிலிருந்து அம்மன் கரகம் எடுத்து, ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். புதன்கிழமை அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்து வழிபாடுகள் நடத்தினர்.
இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பம் மெட்டு சாலையில் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான், தேன்சிட்டு, பூஞ்சிட்டு ஆகிய ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரமலைக்கள்ளர் சமுதாயத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.