ரேசன் கடையை பார்க்காமலேயே பொருள்கள் தரமில்லை என்பதா? என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் குற்றச்சாட்டுக்கு தமிழக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் என்ற தவறான தகவலையே மத்திய அமைச்சரும் கூறியுள்ளார். இன்று அனைத்து கடையும் மூடப்பட்டுள்ள நிலையில் பொருள்களை பார்க்காமலேயே பியூஷ் கோயல் பேசியுள்ளார்.
கடையை பார்க்காமலேயே பொருள்கள் தரமில்லை என்பதா?. ரேசனில் தரமான பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக நேரில் பார்வையிட்ட மத்திய அமைச்சர் அஸிவினி சவுபே பாராட்டினார். தமிழ்நாடு அரசு ரேசனில் வழங்கும் பொருள்கள் நன்றாக உள்ளதாக மார்ச் மாதத்தில் பாராட்டிவிட்டு தற்போது குறை கூறுவதா?. பல மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டி இருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.
முன்னதாக இன்று சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசு தரமான அரசியை வழங்கினாலும், தரமற்ற அரிசியை மாநில அரசு விநியோகிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.