நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? முதல்வரின் பதில்கள்!

சமூக வலைத்தளங்களில் மக்களின் உள்ளங்களில் எழும் கேள்விகளுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)


சமூக வலைத்தளங்களில் மக்களின் உள்ளங்களில் எழும் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

திராவிடவியல் கோட்பாடுகள் - திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கும் “உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரின் முதல் பாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.16) காலை ஒளிபரப்பானது.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித் பதில்கள் விவரம் வருமாறு.

கேள்வி: இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். கழகத்தை வழிநடத்த வருங்காலத்தில் புதிய திட்டம் ஏதேனும் வைத்துள்ளீர்களா?

பதில்: அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்!
என்பதன் அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போது என்னுடைய பாதை!

கொள்கையும் கோட்பாடும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கழகத் தொண்டர்களுக்குள், உடன்பிறப்பு என்ற உணர்வும் நம்முடைய இயக்கத்தில் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பொதுக்குழுவில் பேசும்போதுகூட கொள்கையையும் நட்பையும்தான் அதிகமாக வலியுறுத்திப் பேசினேன்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கும் வழிகாட்டியாக கழகம் இருக்க வேண்டும்.

இனித் தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளும் என்கிற நிலை நீடிக்க வேண்டும்.

என்னில் இருந்து தொடங்கி கடைக்கோடி தொண்டன்வரை இந்த இலட்சியத்துக்காக உழைக்க வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம்!

கேள்வி: நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனை நிறைவேற்றுவதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

பதில்: தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு.

இந்தியா முழுமைக்கும் சமூகநீதியில் - கூட்டாட்சிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு.

இதற்கான அரசியல் நடவடிக்கைளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்.

கேள்வி: கோபாலபுரம் முதல் கோட்டை இந்த அரை நூற்றாண்டுகால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?

பதில்: பொதுவாழ்க்கை என்பது முள்கிரீடம் போல என்று சொல்வார்கள். என்னுடைய பொதுவாழ்வுக்கு அங்கீகாரம் என்பது, தலைவர் கலைஞர் சொன்ன, “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்பதுதான்.

என்னைப் பொறுத்தவரையில், அந்த உழைப்பால் மக்களுக்கு விளையும் நன்மைகள் என்ன என்பதில்தான் என்னுடைய பொதுவாழ்க்கை அடங்கி இருக்கிறது என எண்ணுகிறேன்.

கழகப் பொறுப்புகளைப் பொறுத்தவரையில், கோபாலபுரத்தில் 13 வயது சிறுவனாக, கோபாலபுரம் இளைஞர் திமுக-வை ஆரம்பித்த நான், பல்வேறு பொறுப்புகளைக் கடந்த 50 ஆண்டுகளில் சுமந்து, திறம்படப் பணியாற்றிய காரணத்தால்தான் இன்று கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு இரண்டாவது முறையாகக் கழக உடன்பிறப்புகளால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

அதேபோல் மக்கள் பணியைப் பொறுத்தவரை, மேயராக நான் ஆற்றிய பணிகளுக்குத் தலைநகர் சென்னையின் வளர்ச்சியே சாட்சியாக இருக்கிறது.

அமைச்சராக, துணை முதல்வராக என் நெஞ்சத்திற்கு நெருக்கமான திட்டங்களைப் பல முறை எடுத்துக் கூறி இருக்கேன். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற திட்டங்கள் அவை.

இப்போது முதல்வராகச் சொல்ல வேண்டும் என்றால், காலை உணவுத் திட்டம், மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, நான் முதல்வன் போன்றவை எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய திட்டங்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் அவதூறுகள், என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதுக்குள் அனுமதிப்பது கிடையாது.

என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும் என்பதுதான்.

தமிழ்நாட்டு மக்களுக்குப் பணியாற்றுவதே என் வாழ்வின் கடமையாகக் கருதுகிறேன்

கேள்வி: உங்கள் மீது அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கொச்சையாக விமர்சனம் செய்பவர்களை எளிதாகக் கடந்து போகிறீர்களே, அது எப்படி முடிகிறது?

பதில்: ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறேன். காழ்ப்புணர்ச்சியோடு பரப்பக்கூடிய அவதூறுகள் குறித்து ஏற்கனவே நான் பதில் சொல்லிவிட்டேன்.

கேள்வி: 24 மணிநேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை எடுத்திருக்கிறீர்கள். அதற்கேற்ப உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் ரகசியம் என்ன என்பதை இளைய தலைமுறைக்குத் தெரிவிப்பீர்களா?

பதில்: எல்லோரும் இதனை ஆச்சர்யமாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

நான் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கேன்.

முன்பு கட்சிப் பணி மட்டும் இருந்தது - இப்போது நிர்வாகப் பணியும் சேர்ந்திருக்கிறது.

அதனால் வேலைகள் அதிகமாகி இருக்கின்றன. அதனை மிகச் சரியாகப் பிரித்து - நேரம் ஒதுக்கி செயல்படுகிறேன்.

காலையில் உடற்பயிற்சி - மாலையில் நடைப்பயிற்சி, சரியான - அளவான உணவு என எனது உடல் நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பேன்.

வேலைகள் அதிகமாக இருந்தாலே உடல் சோர்வு வராது. இதில் ரகசியம் எதுவும் இல்லை.

கேள்வி: நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு ஆளுநரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

பதில்: இதை எதிர்கொண்டுதானே ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது. அதைப் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடமிருக்காது.

அதுமட்டுமில்லாமல், ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம்.

சட்டமன்றத்திலேயே இது பற்றி நான் சொல்லி இருக்கிறேன்....

நிதி நிலைமை சரியாக இருந்தால் - ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு சரியாக இருந்திருந்தால் - இன்னும் பல திட்டங்களைத் தீட்டியிருக்க முடியும் என்று நான் சொன்னேன்.

என்னைப் பொறுத்தவரையில் - இது போன்ற நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டு இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.

எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பதுதான் என்னுடைய பாணி.

கேள்வி: ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் எவையெவை சாதனைகளாக இருக்கின்றன? எவையெவை சவால்களாக இருக்கின்றன?

பதில்: மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என்னுடைய சாதனை!

நிதி நெருக்கடிதான் இன்னும் இருக்கிற சவால்!

கேள்வி: தமிழ்நாடு முழுவதும் சாலைகள் எப்போது சரி செய்யப்படும்? மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் அனைத்தும் முழுமையாக எப்போது முடியும்?

பதில்: பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியில எதுவும் செய்யப்படவில்லை. அதுனால்தான் இந்த நிலைமை காணப்படுகிறது.

2021 மே மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்கொண்டோம். இரண்டாவது அலையில் இருந்து மீண்ட தருணத்தில், கடுமையான மழையை எதிர்கொண்டோம்.  அப்போது, ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியதால், பொதுமக்கள், கடுமையான இன்னல்களுக்கு உள்ளானார்கள்.

நமது அரசு அமைந்ததும், கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்டதும், இயற்கைப் பேரிடரால் இனி சென்னை மக்கள் எந்தக் காலத்திலுமே துயரப்படாத வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தேன்.

அதற்கு, பழுதான சாலைகளும், சீரழிந்த வடிநீர் கால்வாய்களுமாகச் சிதைந்து கிடந்த சென்னையை முழுமையாக மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பெரும் பணிதான் தற்போது நடைபெற்று வருகிறது.

நகரின் அனைத்துப் பகுதியிலும் இந்தப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை நான் நன்றாகவே அறிவேன். ஆனாலும், இந்தச் சிரமங்களை சிறிது காலம் சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சிறிது காலச் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டால், நெடுங்கால நன்மை காத்திருக்கிறது. அதாவது, இனி சென்னையில் எப்போதுமே கனமழை காரணமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்தப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மட்டுமில்லாம, தமிழ்நாடு முழுமைக்கும் இதேபோல மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.       

கடந்த ஓராண்டு காலத்தில், வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, சென்னையில மட்டும் 4560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நானே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன்.

மழைக்கு முன்னால் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன். விரைந்து செயல்படுவோம்!

கேள்வி: நீட் தேர்வுல இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?

பதில்: முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள்.

நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக இருக்கும்.

கேள்வி: திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திமுக தவறிவிட்டதா நீங்க நினைக்கிறீங்களா?

பதில்: இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி நடத்துகிற திராவிட பயிற்சிப் பாசறைக் கூட்டங்களையும் -

தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா நடத்திய திராவிட மாதம் கூட்டங்களையும் நீங்கள் கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

இளைஞரணி சார்பாக, கடந்த ஜூலை 5 -ஆம் தேதி தொடங்கி, கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும், உணர்ச்சியோடு நடத்தப்பட்டு வருது. இத்தகைய பாசறைக் கூட்டங்கள் 187 தொகுதிகளில் இதுவரை நடந்திருக்கிறது. மீதமிருக்கும் பகுதிகளிலும் அடுத்தடுத்து நடத்தப்பட இருக்கிறது.

கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுபவர்கள் பேசி முடித்ததும், பின்னர் நடைபெறும் கேள்வி – பதில் பகுதியில், இளைஞர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெறுகிறார்கள்.

ஏன், எதற்கு, எப்படி எனப் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்கும் இளைஞர்களின் ஆர்வமே திராவிட இயக்கத்தின் கொள்கைகள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.  தனது அடிப்படைக் கொள்கைகளை விதைக்க திமுக என்றைக்கும் தவறியது இல்லை.

கேள்வி: பா.ஜ.க.வுடன் திமுக சமரசமாகப் போய்விட்டதாகச் சிலர் சொல்கிறார்களே?

பதில்: இப்படிச் சொல்லுவதை பாஜகவே ஏற்றுக்கொள்ளாது!

இவ்வாறு “உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரின் முதல் பாகம் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com