சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் புதன்கிழமை (அக்.19) உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் புதன்கிழமை (அக்.19) உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் வள்ளுவர் கோட்டம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
எதிா்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வத்தை மாற்றக் கோரி, பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியும், அமளியிலும் ஈடுபட்டனா். ஆனால், அதுகுறித்த எந்த சலனத்தையும் காட்டாமல் ஓ.பன்னீா்செல்வம் மெளனமாக அமா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.