ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து, எதிரே வந்த 2 கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து வாலாஜாபேட்டை வழியாக திருத்தணி வரையில் செல்லும் அரசுப் பேருந்து கீழ் புதுப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
இதன் காரணமாக நிலைகுலைந்த பேருந்து வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கரை நோக்கி வந்த இரண்டு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 நபர்களுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாலாஜாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.