நடிகை குஷ்பு மீது அவதூறு: மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணி புகார்
குஷ்பு உள்ளிட்ட கட்சியின் பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணியினர் மனு அளித்தனர்.
திரைப்பட நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட கட்சியின் பெண் நிர்வாகிகள் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்த திமுக பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
பாஜக மாவட்ட மகளிரணித் தலைவர் ஜி.தேவி அளித்துள்ள புகார் மனுவில், திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் அக்.28 ஆம் தேதி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி முகநூல் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதுடன் வேதனை அடையச் செய்துள்ளது. எனவே, அவதூறாகப் பேசிய சைதை சாதிக் என்பவர் மீது வழக்குப் பதிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மனுவினை காவல் உதவி ஆய்வாளர் முருகன் பெற்றுக்கொண்டார்.
அப்போது, பாஜக மாநில மகளிரணிச் செயலர் ஜீவஜோதி, மாவட்ட மகளிரணி பொதுச் செயலர்கள் அமுதா, மகேஸ்வரி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சி.எஸ்.கண்ணன், எம்.ராகவன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பால.பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் ஏ.கமாலுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.